அதானி, மோடி, ராகுல் ட்விட்டர்
இந்தியா

பங்குசந்தையில் எதிரொலிக்கும் அதானி குறித்த பரப்புரை.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி மீது வழக்கு!

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இறுதியாக ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொழிலதிபர்களான அதானி, அம்பானி குறித்துப் பேசி வருகின்றனர்.

அம்பானி, அதானி

இது, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆதாரமற்ற கூற்றுகளை வெளியிடுவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பங்கு முதலீட்டாளர் சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையும் படிக்க: புதிய இலக்கு! Gpay, PhonePe-க்கு போட்டியாக அதானி குழுமத்தின் அடுத்த டார்கெட்!

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ”தேர்தல் பிரசாரத்தின்போது, அதானி குழுமத்தைப் பற்றி ராகுல் ஆற்றிய உரை முற்றிலும் தவறானது. மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கூறப்பட்டதாகவும், இதனால் அதானி குழும நிறுவனங்களின் மீதான கண்ணோட்டம் முதலீட்டாளர்களின் பார்வையில் தவறாக மதிப்பிடப்படும்; முதலீட்டாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. கடந்த மாதம், ராகுல் காந்தியைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, ’அம்பானி மற்றும் அதானி பற்றி பேசுவதை ஏன் திடீரென்று நிறுத்திவிட்டார்? அதானி, அம்பானியிடமிருந்து காங்கிரஸுக்கு டெம்போ வாகனத்தில் கறுப்புப் பணம் பெறப்பட்டு விட்டதா?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மோடி, ராகுல்

அதற்கு ராகுல், ’பிரதமர் தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?’ எனப் பதிலளித்திருந்தார். தொழிலதிபர்களுக்கு எதிரான இத்தகைய எதிர்மறையான பரப்புரை பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மையையும் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்துகிறது. ஆகையால், இதுபோன்ற ஆதாரமற்ற கூற்றுகளை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ம.பி | பாலியல் புகாரை திரும்பப் பெற மறுப்பு.. பாதிக்கப்பட்ட பெண் உட்பட ஒரே குடும்பத்தில் மூவர் கொலை?