இந்தியா

தலைமை நீதிபதி என் முன்னால் ஆஜராகணும்: நீதிபதி அதிரடி

தலைமை நீதிபதி என் முன்னால் ஆஜராகணும்: நீதிபதி அதிரடி

webteam

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சி.எஸ். கர்ணன். தமிழரான இவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கி‌ஷன் கவுல் உட்பட சில நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட், தாமாக முன்வந்து நீதிபதி கர்ணன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நீதிபதி கர்ணன் ஆஜரானார். இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் நீதிபதி கர்ணன், நேற்று அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த அவர், ’சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் அமர்வு என்னை அவமதித்தது. அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டம், 1989–ஐ மீறிவிட்டனர். இது தொடர்பாக நான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அவர்களை கூறி உள்ளேன். வரும் 28ம் தேதி காலை 11.30 மணிக்கு எனது முன்பாக 7 நீதிபதிகளும் ஆஜராக வேண்டும்’ என்றார்.