இந்தியா

தலைக்கேறிய போதை.. ஒட்டகப்பால் மில்க் ஷேக் கேட்டு ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்..!

தலைக்கேறிய போதை.. ஒட்டகப்பால் மில்க் ஷேக் கேட்டு ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்..!

kaleelrahman

புதுச்சேரியில் மது போதை கஞ்சா போதை தலைக்கேறியதால் பேக்கரியில் ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டு கடையை சூறையாடி வழக்கில் 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


போதை தலைக்கேறினால் என்ன செய்கிறோம் எனத்தெரியாமல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. அதிலும் சமீப காலமாக கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி குற்றவழக்குகளில் சிக்கி தங்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.


அந்த வகையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பைபாஸ் பகுதியில் நாராயணன் என்பவர் நடத்திவரும் பேக்கரி கடைக்கு 3 இளைஞர்கள் போதையில் வந்துள்ளனர். இவர்கள் ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டுள்ளனர். ஒட்டகப்பால் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த 3 இளைஞர்களும் பேக்கரியை அடித்து சூறையாடி ஊழியர்களையும் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.


இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளைக் கொண்டு அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தநிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வேல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோகுல், உதயகுமார், முருகவேல் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்