இந்தியா

துப்பாக்கியுடன் ஸ்கூலுக்கு வந்த மாணவன்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

webteam

நாட்டுத் துப்பாக்கியுடன் பள்ளிக்கூடத்துக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

டெல்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருக்கிறது ஜார்சா. இங்குள்ள பிரேம் காலனியை சேர்ந்த மாணவன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 16. அங்குள்ள மருமல் என்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இவன், நேற்று வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளான். வகுப்பு முடிந்ததும் திடீரென பையைத் திறந்து துப்பாக்கியை காட்டியுள்ளான் சக மாணவர்களிடம். அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுபற்றி பள்ளி ஆசிரியரிடமும் தலைமை ஆசிரியரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் மாணவனிடம் விசாரித்தார். இதை சக மாணவன் ஆசிஷிடம் இருந்து வாங்கியதாகவும் பள்ளியில் சக மாணவர்களிடம் பந்தா பண்ணுவதற்காக துப்பாக்கியை கொண்டு வந்ததாகவும் சொன்னான். 

இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்தனர். துப்பாக்கி அவனுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.