இந்தியா

கலவர பூமிபோல மாறிய கல்லூரி வளாகம்: புதுச்சேரியில் பயங்கரமாக மோதிக் கொண்ட மாணவர்கள்..!

Rasus

புதுச்சேரியில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் இருகுழுக்களாக பிரிந்து பயங்கரமாக மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வில்லியனூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. இரு பிரிவு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்கெனவே பிரச்னைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்துள்ளது. இதில் மாணவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதனால் கல்லூரி வளாகம் கலவரம் போல காட்சி அளித்தது. இந்த மோதலில் இரு பிரிவையும் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மோதலை மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

வீடியோ குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, கல்லூரி தரப்பில் இருந்து இதுவரை புகார் வரவில்லை எனவும், புகார் அளிக்கப்படும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கல்லூரிக்கு வெளியே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.