மேற்கு வங்கம் முகநூல்
இந்தியா

மேற்கு வங்கம் | தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் வெடித்த வன்முறை!

PT WEB

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்தும், நீதி கேட்டும் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளிலும், ஹவுராவிலும் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை அகற்ற போராட்டக்காரர்கள் முயன்றனர். போராட்டக்காரர்கள் சிலர் கற்களையும், செங்கற்களையும் வீசி காவல்துறையினரை தாக்கினர்.

இதனால் போராட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்திய காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியும் அடித்தனர். இதேபோல ஹவுரா, Santragachhi உள்ளிட்ட இடங்களிலும் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு நடந்த போராட்டங்களிலும் வன்முறைகள் மூண்டன. இந்நிலையில், தலைமைச்செயலகம் நோக்கி பேரணி நடத்த முயன்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து 12 மணிநேர பொது வேலைநிறுத்தத்துக்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்றும், மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் மேற்குவங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் போக்குவரத்து, சந்தைகள், வணிக நிறுவனங்கள் கடைகள் வழக்கம்போல இயங்கும் என்றும் மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.