இந்தியா

திரையரங்குகள் அக்டோபர் 22 முதல் மீண்டும் திறக்கப்படும்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Veeramani

அக்டோபர் 22-ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள  திரையரங்குகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.

கோவிட் -19 இன் இரண்டாவது அலை நாட்டைத் தாக்கிய பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியா முழுவதும் திரைரங்குகள் மூடப்பட்டன. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் திரையரங்குகளை மீண்டும் திறந்துவிட்டன, எனவே மகாராஷ்டிராவிலும் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து மகாராஷ்டிர சினிமா அமைப்பு கோரிக்கை வைத்து வந்தது.

இது தொடர்பாக கோவிட் -19 பணிக்குழுவின் கூட்டத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில அரசு விரைவில் நிலையான செயல்பாட்டு நடைமுறையை வெளியிடும் என்றார். இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்கும் அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டது.

முன்னதாக, அக்டோபர் 7 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் நேற்று அறிவித்தது. அதேபோல, மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும்  அரசு அறிவித்தது.