ராமர் கோயில் முகநூல்
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் | பிராண பிரதிஷ்டை முடிந்து 5 மாதங்களேயான நிலையில், மேற்கூரை ஒழுவதாக புகார்!

PT WEB

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்தசூழலில், கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்தர தாஸ், கோயிலின் மேற்கூரை மழையின் போது ஒழுகுவதாக கூறியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்

பால ராமர் இருக்கும் கருவறையின் மேற்கூரை ஒழுகுவதாக கூறியுள்ள அவர், "இது ஆச்சரியமளிக்கிறது. மேற்கூரையிலிருந்து தண்ணீர் வடிய இடமில்லை. ஆனால் இது தொடரும்பட்சத்தில் கனமழை பெய்தால், பக்தர்கள் வழிபடுவது சிரமமாகிவிடும்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோயில் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, ”முதல் தளத்திலிருந்து மழை நீர் சொட்டுவதை நானே பார்த்துள்ளேன். இரண்டாம் தளமாக உள்ள குரு மண்டபத்திற்கு மேற்கூரை இல்லாததால், இது எதிர்பார்த்த ஒன்றே. அங்கு கட்டுமான பணிகள் நிறைவடையும்போது தண்ணீர் கசிவு நின்றுவிடும். அனைத்து தளங்களிலும் தண்ணீர் வடிவதற்கான ஸ்லோப்புகள் இருப்பதால், வடிகால்கள் இல்லை. கட்டுமான திட்டத்தில் குறைகள் எதுவுமில்லை.

ஆச்சார்யா சத்யேந்தர தாஸ் - நிருபேந்திர மிஸ்ரா

நாகரா கட்டடக்கலையின் விதிகளின்படி, முதல் தளத்தின் மேல் உள்ள மண்டபங்களுக்கு மேற்கூரை அமைக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.