இந்தியா

சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

webteam

சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்.

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து,  சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார். பின்னர் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்க் காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதற்கிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவையும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கி யது. 

இந்நிலையில் சிபிஐ இயக்குநர் தேர்வு மற்றும் நியமனத்தில் வெளிப்படை தன்மை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகி உள்ளார்.

தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் விலகியுள்ளதாக நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். இந்த வழக்கு  நீதிபதி சிக்ரி அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.