இந்தியா

“காஷ்மீரில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும்?” - நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

webteam

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா கடந்த 6ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. மேலும் அங்கு கலவரம் எதுவும் நடப்பதை தடுக்க மக்களின் நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து டெஹசின் பூனாவாலா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளான 144 தடை, தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, இணையதள சேவை முடக்கம் ஆகியவை நீக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள், “ஜம்மு-காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும்?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு சார்பில் வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழலை தினமும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறோம். இதுவரை அங்கு கலவரத்தால் ஒரு சிறு துளி இரத்தமும் சிந்தப்படவில்லை. அத்துடன் யாரும் அங்கு இறக்கவில்லை. ஆகவே அங்கு நிலவும் சூழலை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்” எனப் பதிலளித்தது. 

இதனையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அங்கு நிலவும் சூழல் குறித்து பார்ப்போம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.