மத்திய அரசு முகநூல்
இந்தியா

“மனைவியிடம் கட்டாய உறவில் கணவர் ஈடுபடுவதை குற்றமாக ஏற்க முடியாது” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

PT WEB

“திருமண பந்தத்தின் புனிதத்தை காக்க, மனைவியுடன் கட்டாய உறவில் ஈடுபடுவது குற்றமல்ல” என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மனைவியின் விருப்பமின்றி கட்டாய உறவில் கணவர் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்கக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. அதில், “திருமண பந்தத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க நாடாளுமன்றம் பல்வேறு சட்டத் தீர்வுகளை வழங்கியுள்ளோம்” என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் அந்த பதில் மனுவில், “இந்த விவகாரம் சமூக ரீதியானதே தவிர சட்டரீதியானது அல்ல. மனைவியுடன் கட்டாய உறவில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்க சட்டம் இயற்றும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு இல்லை, நாடாளுமன்றத்திற்கே உள்ளது.

பல்வேறு தரப்பின் கருத்துகளை பெற்ற பிறகே, ‘திருமண பந்தத்தில் கட்டாய உறவில் ஈடுபடுவதை குற்றமாக கருதுவதற்கு விதி விலக்கு’ வழங்கிய சட்டப்பிரிவு 372 (2)ஐ தொடர நாடாளுமன்றம் கடந்த 2013ல் முடிவெடித்தது.

இதைக் குற்றமாக கருதினால் திருமண உறவில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதனால், மனைவியிடம் கட்டாய உறவில் கணவர் ஈடுபடுவதை குற்றமாக ஏற்க முடியாது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தக் கருத்து, திருமண பந்தத்தில் நடக்கும் வன்கொடுமை குற்றங்களை அதிகரிக்கும் என்ற நோக்கத்தால் பலராலும் எதிர்க்கப்பட்டு வருகிறது.