சென்னை மெட்ரோ ரயில் திட்டம் புதிய தலைமுறை
இந்தியா

சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட திட்டம்|ஒரு ரூபாய்கூட தராத மத்திய அரசு.. ஆர்.டி.ஐ. மூலம் வெளியான தகவல்!

Prakash J

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் 118.9 கிமீ தூரத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டிருந்தார்.

அதற்குரிய பதிலில்தான், ’சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை’ எனத் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, நாசிக் மெட்ரோ ரயில் திட்டங்களை தவிர, இதர கொச்சி, பெங்களூரு, நாக்பூர் ஆகிய 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மொத்தமாக ரூ.18,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முன்னதாக, கடந்த 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆர்.டி.ஐ. மூலம் வெளிவந்த தகவலில் சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி அளிக்காதது உறுதியாகி உள்ளது.

இதையும் படிக்க: சைவ உணவுக்கு பதில் சிக்கன் பிரியாணி டெலிவரி.. வருத்தப்பட்ட நபர்.. பதிலளித்த ஜொமாட்டோ.. #Viralvideo