இந்தியா

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நடுவர் மன்றம் - அமைச்சர் விளக்கம்

webteam

நாடு முழுவதும் நிலவும் நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடுவர் மன்றங்களுக்கு பதிலாக தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தகவல் வெளியிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தலைமையில் ‌5 மாநிலங்களின் நீர் ஆதாரத்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேசிய அளவில் அமையவுள்ள நடுவர் மன்றம், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதோடு, நீர்ப்பாசன வசதிகளையும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். காவிரி, நர்மதா, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு நதிகளுக்கு தனித் தனியாக நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு பதிலாக, ஒரேயொரு நதி நீர் நடுவர் மன்றம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்காக மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னை சட்டத் திருத்த மசோதா மக்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தேசிய அளவிலான நடுவர் மன்றம் செயல்பாட்டுக்கு வரும்போது, அதன் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும் என்றும், அதை மாநில அரசுகள் கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தேசத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.