அமித் ஷா  முகநூல்
இந்தியா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தெலங்கானாவில் வழக்குப்பதிவு - இதுதான் புகார்!

PT WEB

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும், வரும் மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலங்கானாவுக்கு, பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானாவில் நடந்த வாகனப் பேரணியின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

பேரணியின்போது விதிகளை மீறி, குழந்தைகளை பங்கெடுக்க வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அமித்ஷா உள்ளிட்ட 5 பேர் மீது தெலங்கானா காவல்துறைவழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.