ஸ்மிருதி, அன்ஷ்மான் சிங் எக்ஸ் தளம்
இந்தியா

”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!

Prakash J

வீரமரணம் அடைந்த அன்ஷ்மான் சிங்

இந்திய ராணுவத்தின் 26வது பஞ்சாப் படைப்பிரிவில் சியாச்சின் பனிப்பாறை பகுதியில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், கேப்டன் அன்ஷுமான் சிங். இவர் கடந்த ஆண்டு (2023) ஜூலை 19ஆம் தேதி, சியாச்சினில் பணியில் இருந்தபோது அங்கு இருந்த ஆயுதக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. அதன் உள்ளே சிக்கிக்கொண்டவர்களை கேப்டன் சிங் உடனடியாக மீட்டார்.

ஆனால், தீவிபத்தில் சிக்கிக்கொண்ட மருத்துவ உபகரணங்களை எடுக்கச் சென்றபோது சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல், உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரில் கேப்டன் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இவ்விருதை கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங்கிற்கு வழங்கினார்.

இந்த நிலையில் அன்ஷுமான் சிங்கின் பெற்றோர்கள், ”ராணுவ வீரர் ஒருவர் இறந்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்திய ராணுவத்தின் அடுத்த உறவினர் (Next Of Kin) அளவுகோலில் மாற்றம் செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

இதையும் படிக்க: புனே|IAS பெண் அதிகாரி மீது விழும் குற்றச்சாட்டுகள்..பணியிட மாற்றத்திற்குப் பிறகு வெளிவரும் தகவல்கள்!

அன்ஷுமான் சிங்கின் பெற்றோர் பேட்டி

இதுகுறித்து அன்ஷுமான் சிங்கின் தந்தை ரவி பிரதாப் சிங் மற்றும் அவரது தாய் மஞ்சு சிங் ஆகியோர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளனர். அதில், ”எங்கள் மருமகள் (ஸ்மிருதி) எங்களுடன் வாழவில்லை. திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகின்றன. குழந்தை இல்லை. எங்கள் மகன் சுவரில் மாலையுடன் தொங்கும் புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது. எங்கள் மகனின் மரணத்திற்குப் பிறகு பெரும்பாலான உரிமைகளை ஸ்மிருதி பெறுகிறார். NOKக்கு அமைக்கப்பட்டுள்ள அளவுகோல் சரியானது அல்ல. அதனால்தான் NOK-இன் வரையறை சரி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

மருமகள் குடும்பத்தில் தங்கினால், யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும். மற்ற பெற்றோர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக NOK விதிகளை அரசாங்கம் திருத்த வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறோம். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் பேசியுள்ளோம்” என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

NOK விதிகள் கூறுவது என்ன?

ராணுவ வீரர் ஒருவர் இறந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவி அளிப்பதை இந்தக் கொள்கை உள்ளடக்குகிறது. அடுத்த உறவினர், அதாவது Next of kin என்ற சொல், ஒரு நபரின் மனைவி, நெருங்கிய உறவினர்கள், குடும்ப உறுப்பினர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரைக் குறிக்கிறது. திருமணம் ஆகாத ராணுவ வீரராக இருந்தால், அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் (கார்டியன்), NOK என பட்டியலிடப்படுவார்கள். இதுவே அவருக்கு திருமணம் ஆகிவிட்டால், அவர்களது பெற்றோரைவிட, அவர்களது மனைவியின் பெயர் NOK பட்டியலில் முன் சேர்க்கப்படும். இதனால் ராணுவச் சேவையின்போது தனிநபருக்கு ஏதாவது நேர்ந்தால், இழப்பீட்டுத் தொகை NOK-க்கு வழங்கப்படும் என்று விதிகள் கூறுகின்றன.

இதையும் படிக்க: ஜெய்ப்பூர்|முற்றிய வாக்குவாதம்.. பாதுகாப்பு காவலரை கன்னத்தில் அறைந்த ஸ்பைஸ் ஜெட் ஊழியர்! #ViralVideo