கேக் freepik
இந்தியா

கர்நாடகா: கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்? உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கர்நாடகாவில் 12 கேக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் ரேட் வெல்வெட், பிளாக் பாரெஸ்ட் கேக்களில் புற்று நோய்க்கு காரணமாகுமான பொருட்கள் சேர்க்கப்படுவது உணவுத்துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடகாவில் சில திண்பண்டங்களில் அபாயகரமான செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இவையாவும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உதாரணத்திற்கு கோபி மஞ்சூரியன், சிக்கன், மீன், மட்டன் கபாப்களில் செயற்கை நிறம் சேர்க்க உணவுத்துறை தடை விதித்திருந்தது. சிறார்கள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயிலும் செயற்கை நிறங்களை சேர்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விதியை மீறி நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இவை மட்டுமன்றி பெரியவர்கள், சிறார்கள் விரும்பிச் சாப்பிடும் கேக்குகளிலும் இத்தகைய நிறங்கள் சேர்க்கப்படுவதாகக் கூறப்பட்டது.

எனவே உணவுத்துறை, 12 விதமான கேக் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியது. அதன் முடிவில், “இவற்றில் சேர்க்கப்படும் பொருட்கள் புற்றுநோய்க்கு காரணமாகக்கூடும். இத்தகைய கேக்குகள் சாப்பிட தகுந்தது அல்ல” என்றும் கூறியுள்ளன.

குறிப்பாக பிளாக் பாரெஸ்ட், ரெட் வெல்வெட் கேக்குகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகளால், அலர்ஜி, ஆஸ்துமா, புற்றுநோய், அஜீரணக் கோளாறு, தலைவலி, சரும பிரச்னை, சுவாச கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமான பிரச்னையாக கருதிய உணவுத்துறை, “கேக் தயாரிப்போர், உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டுத் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளது.

கேக்

இது குறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “மாதந்தோறும் உணவுப் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கிறோம். அறிக்கையை வெளியிடுகிறோம். அதே போன்றுதான் கேக் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போதுதான் இவற்றில் செயற்கை நிறம் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிறமிகளை கேக் தயாரிப்போர், பயன்படுத்தக்கூடாது. உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதுகுறித்து, மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கமாகும்” என்றார்.