rahul gandhi, mk stalin, mamata pt web
இந்தியா

இடைத்தேர்தல்: கெத்துகாட்டும் INDIA கூட்டணி; பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி; 13 தொகுதிகளின் நிலவரம்?

Angeshwar G

7 மாநிலங்களின் 13 தொகுதி இடைத்தேர்தல்கள்

நாடெங்கும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் INDIA கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் உள்ளனர்.

ஆதிக்கம் செலுத்தும் மம்தா

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ராய்கஞ்ச், ரணாகத் தக்ஷிண், பக்தா, மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலுமே ஆளும் திரிணமூல் காங்கிரசுக்கும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவியது.

mamata banerjee

ராய்கஞ்ச் தொகுதியில் 7 ஆவது சுற்றில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிருஷ்ணா கல்யாணி 64 ஆயிரத்து 862 வாக்குகள் பெற்ற நிலையில், 41 ஆயிரத்து 552 வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். பாஜகவின் மனாஷ் குமார் கோஷ் 23,310 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் 17,122 வாக்குகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ரணாகத் தக்ஷிண் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முகுந்த் மணி அதிகாரி 52 ஆயிரத்து 634 வாக்குகளைப் பெற்று 13 ஆயிரத்து 428 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். பாஜக வேட்பாளரான மனோஜ் குமார் பிஸ்வாஸ்39 ஆயிரம் வாக்குகளையும், சிபிஎம் வேட்பாளர் 6,899 வாக்குகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பக்தா தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மதுபார்ணா தாக்கூர் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், மணிக்தலா சட்டமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுப்தி பாண்டே 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னணியில் உள்ளனர்.

இமாசல பிரதேசத்தில் நிலை என்ன?

அடுத்ததாக இமாசல பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமிர்பூர், நலாகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் தெஹ்ரா சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரான காம்லேஷ் தாக்கூர் 7860 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பாஜக வேட்பாளரான ஹோஷ்யார் சிங் உள்ளார்.

நலாகர் சட்டமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளரான ஹர்தீப் சிங் பாவா 6870 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பாஜக வேட்பாளர் உள்ளார்.

இமாச்சல பிரதேசத்தின் மற்றொரு தொகுதியான ஹமிர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான ஆஷிஸ் சர்மா 1433 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் புஸ்பிந்தர் வர்மா சொற்ப வாக்குகளில் பின்னணியில் உள்ளார்.

உத்தராகண்டில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்

இமாசலத்தின் அண்டை மாநிலமான உத்தராகண்ட்டில் பத்ரிநாத், மங்கலார் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லாகாபத் சிங் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளனர். இரண்டாம் இடத்தில் பாஜக வேட்பாளர் உள்ளார். மங்கலார் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் 4500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

ஆம்ஆத்மி வெற்றி

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் INDIA கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், அனைத்தையும் முறியடித்து, ஆம் ஆத்மி வேட்பாளர் மோகிந்தர் பகத் 37 ஆயிரத்து 325 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளரும், மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் உள்ளனர்.

மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ்

தீரன் ஷா

மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷா, 7709 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பாஜக உள்ளது. பிகாரில், ருபாலி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், 7 ஆவது சுற்றின் முடிவில் சுயேட்சை வேட்பாளரான ஷங்கர் சிங் 1036 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். ஐக்கிய ஜனதா தளம் இரண்டாம் இடத்திலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

முன்னணியில் INDIA கூட்டணி 

இடைத்தேர்தல் நடைபெறும் 13 தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே பாஜக முன்னணியில் உள்ளது. அதிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னணியில் உள்ளார். மற்ற பெரும்பாலான தொகுதிகளில் INDIA கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் உள்ளனர். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், ரூபாலி தொகுதிகளில் மொத்தமுள்ள 12 சுற்றுகளில் 7 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, நாடு முழுவதும் INDIA கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.