இந்தியா

11 பேர் மர்ம மரணத்தில், ’அலையும் ஆன்மா’!

webteam

டெல்லியில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கண்டெடுக்கப்பட்ட டைரியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், ’அலையும் ஆன்மா’ பற்றியும் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி ஒருவர் தரையில் சடலமாகவும் கிடந்தார். 

உயிரிழந்தவர்கள், நாராயண் தேவி (77), அவரது 2 மகன்கள் புவனேஷ் பாட்டியா (50), லலித் பாட்டியா (45), அவர்கள் மனைவி சவிதா (48), டினா (42), நாராயண் மகள் பிரதிபா (57), பேரக் குழந்தைகள் பிரியங்கா (33), நீது (25), மோனு (23), துருவ் (15), சிவம் (15) என்பது தெரிய வந்தது. அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? எனக் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் ஆய்வு நடத்தினர். 

அப்போது வீட்டிற்குள்ளேயே கோயில் கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்தது. வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே மூட நம்பிக்கையால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு துண்டுக் காகிதங்கள், டைரிகளில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டுள்ளன. 11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அவை தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ச்சியாக பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்து வருவதால் போலீசாருக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படுவது லலித் சுண்டவத் என்பவர். தொழிலதிபரான லலித், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக நினைத்து மாய உலகில் வாழ்ந்துள்ளார். மோட்சத்தை அடைய தற்கொலைதான் வழி என்று தனது தந்தை கூறியதாக குடும்பத்தினரிடம் லலித் தெரிவித்துள்ளார். 

இந்த மர்ம மரணத்தின் புதிரை அவிழ்க்க போலீசார், அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர், குடும்ப சொந்தம், தொழிலதிபர்கள் உட்பட 130 பேரிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில், மரணமடைந்த அந்த 11 பேரில் புவனேஷ், கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியிருக்கிறார் என்கிற தகவலை தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லலித் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் நடந்தவற்றையும், தன்னுடைய குடும்பத்திற்கு கொடுத்த வழிகாட்டுதல்களையும் மறைந்த தனது தந்தை தனக்கு சொன்னதாகவும் சிலவற்றை டைரியில் எழுதி வைத்துள்ளார். அதில் ஆன்மா, இறப்பு, மோட்சம், சொர்க்கம் என பல்வேறு விஷயங்கள் உள்ளன. 

டைரியில், கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் தேதி எழுதப்பட்டவற்றில், ‘தீபாவளி கொண்டாடப்பட்டுவிட்டது. யாரோ செய்த தவறால் சிலவற்றை அடைய முடியவில்லை. நீங்கள் அடுத்த தீபாவளியை பார்க்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கையை உதாசீனப் படுத்தாதீர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 2015- ஆண்டு ஜூலை 19-ம் தேதி எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில் லலித்தின் அப்பா கூறியதை போல எழுதப்பட்டுள்ளது. அதில் ‘என்னுடன் மேலும் நான்கு ஆத்மாக்கள் அலைந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் உங்களை முன்னேற்றினால் இந்த ஆன்மாக்கள் விடுபடும். ஹரித்துவாரில் அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டால் ஆன்மா சாந்தியடைந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். நான் மற்ற ஆன்மாக் களோடு அலைந்துகொண்டிருக்கிறேன்' என்று எழுதப்பட்டுள்ளது.