இந்தியா

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் - விரட்டியடித்த பிஎஸ்எஃப் வீரர்கள்

ஜா. ஜாக்சன் சிங்

காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) பிஎஸ்எஃப் வீரர்கள் விரட்டியடித்தனர்.

பாகிஸ்தானில் இருந்து சமீபகாலமாக ட்ரோன்கள் மூலமான அச்சுறுத்தல் அதிக அளவில் எழுந்துள்ளது. இதன் காரணமாக, ட்ரோன்களை கண்காணிக்கவும், அவற்றை சுட்டு வீழ்த்தவும் இந்திய ராணுவத்தினருக்கும், எல்லை பாதுகாப்புப் படையினருக்கும் (பிஎஸ்எஃப்) பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள அர்னியா பகுதியில் இருக்கும் சர்வதேச எல்லைப் பகுதிக்குள் நேற்று இரவு 7.40 மணியளவில் ட்ரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. அந்த ட்ரோனில் சிறிய சிகப்பு விளக்குகள் மின்னியதால் அதனை பிஎஸ்ஃப் வீரர்கள் கண்டறிந்துவிட்டனர். உடனடியாக அந்த ட்ரோனை குறிவைத்து பிஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ட்ரோன் அங்கிருந்து உடனடியாக பாகிஸ்தானுக்குள் பறந்து மறைந்துவிட்டது. துப்பாக்கியால் சுடுவது தெரிந்ததும் ரிமோட் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்லது ராணுவத்தினர் அந்த ட்ரோனை அந்நாட்டுக்கு திருப்பியிருக்கலாம் என பிஎஸ்எஃப் இயக்குநர் எஸ்.பி. சாந்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அந்த ட் ரோனில் இருந்து ஆயுதம் உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் எல்லைப் பகுதியில் போடப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.