இந்தியா

திருமண நிகழ்வின்போது கழன்று விழுந்த மாப்பிள்ளையின் ’விக்’ - மணப்பெண் எடுத்த முடிவு

Sinekadhara

திருமணத்தின்போது மாப்பிள்ளையின் விக் கழன்று விழுந்ததால் மணப்பெண் ஏமாற்றத்தில் வேறு முடிவை எடுத்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆயுஷ் குர்ரானா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ’பாலா’. இளம்வயதில் வழுக்கை விழுந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக வழுக்கையை எப்படி மறைக்கிறார் என்பதை கருவாகக் கொண்டது இத்திரைப்படம். அதேபோன்ற சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆனால் இந்த ரியல் ஸ்டோரியில் துரதிர்ஷ்டவசமாக கிளைமாக்ஸில் மணமகன் தோல்வியை தழுவிவிட்டார்.

முந்தையநாள் மாலை அனைத்து சடங்குகளும் முடிந்து அடுத்த நாள் காலை முக்கிய திருமண நிகழ்வு மட்டும் நடைபெறவிருந்த நிலையில், மணமகன் மண்டபத்திற்குள் நுழையும்போது மயங்கி விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவர் தலையில் இருந்த ’விக்’கும் கழன்று விழுந்திருக்கிறது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன மணமகள் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சித்தும் ஆனால் மணமகள் ஒத்துக்கொள்ளவே இல்லை எனத் தெரிகிறது.

இதனையடுத்து இந்த பிரச்னையை உள்ளூர் காவல்நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். இருப்பினும் மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் போலீசாராலும் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து பெண் வீட்டார், இந்த திருமணத்திற்காக ரூ.5.66 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், எனவே அதனை மணமகன் வீட்டார் திருப்பித்தர வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர். அதற்கு மணமகன் வீட்டாரும் ஒத்துக்கொண்டதை அடுத்து பிரச்னை முடித்துவைக்கப்பட்டது. திருமணத்திற்கு மகிழ்ச்சியாக வந்த மணமகன் வீட்டார் மணப்பெண் இன்றி சோகத்துடன் தங்கள் ஊருக்கு திரும்பிச்சென்றனர். 

இதுகுறித்து மணமகளின் மாமா கூறுகையில், முன்பே மணமகனின் வழுக்கை பற்றி அவர்கள் தெரிவித்திருந்தால், மனதளவில் எங்களுடைய பெண்ணை தயார் செய்திருப்போம், ஆனால் அவர்கள் அதை மறைத்தது அவர்கள்மீதான நம்பிக்கையை இழக்கவைத்துவிட்டது என்று கூறினார்.