இந்தியா

“தேசத்திற்கு காந்தி அளித்த பங்களிப்பை நான் மதிக்கிறேன்” - மக்களவையில் மன்னிப்பு கோரிய பிரக்யா சிங்

webteam

கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியது தொடர்பாக மக்களவையில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கேட்டார். 

‘நாதுராம் கோட்சே’ ஒரு தேசபக்தர் என நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறினார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதன்படி பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்த ராகுல்காந்தி, ''தீவிரவாதி கோட்சேவை தீவிரவாதி பிரக்யா தேசபக்தர் என்று கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம்'' என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியது தொடர்பாக மக்களவையில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கேட்டார். 
மேலும் “நாடாளுமன்றத்தில் எனது அறிக்கைகள் சிதைக்கப்படுகின்றன. மகாத்மா காந்தி தேசத்திற்கு அளித்த பங்களிப்பை நான் மதிக்கிறேன். சபையின் உறுப்பினர் ஒருவர் என்னை 'பயங்கரவாதி' என்று பரிந்துரைத்தார். இது என் கண்ணியத்தை குறைக்கும் செயல். என் மீது எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். 

பிரக்யா சிங் தாக்கூரின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ‘மகாத்மா காந்தி கீ ஜெய், டவுன் டவுன் கோட்சே’ என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.