model image freepik
இந்தியா

கர்நாடகா | காதலருடன் இருந்த ஆபாச படத்தை அழிக்க காதலி போட்ட ’விபத்து நாடகம்’.. விசாரணையில் ட்விஸ்ட்!

Prakash J

கர்நாடகாவில், காதலரிடம் இருந்த தன் அந்தரங்க படங்களைக் கைப்பற்றும் நோக்கில் அவருடைய போனைப் பறிப்பதற்காக, காதலியே விபத்து ஏற்படுத்திய சம்பவம் போலீசாரிடம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

model image

இதுகுறித்து போலீசார், ”கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுருதி. இவர், தும்ப வம்சி கிருஷ்ணா ரெட்டி என்ற நபரைக் காதலித்துள்ளார். அவருடனான உறவை முறித்துக்கொள்ள சுருதி முடிவு செய்திருக்கிறார். எனினும், வம்சியுடன் நெருங்கியிருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்களை வைத்து, வம்சி வருங்காலத்தில் தம்மைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் சுருதிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அவரிடம் சுருதி கேட்டுள்ளார். அதற்கு, ’அந்தப் புகைப்படங்களை எல்லாம் அழித்துவிட்டேன்’ என வம்சி உறுதியளித்துள்ளார். ஆனால், சுருதி அதை நம்பவில்லை. மேலும், வம்சியின் போனைக் கேட்டபோது அவர் தரவில்லை. இது, சுருதிக்கு சந்தேகத்தை அளித்துள்ளது. இந்தச் சூழலில்தான், முன்பு தன்னுடைய வீட்டில் பணியாற்றிய மனோஜை, சுருதி தொடர்புகொண்டு விபத்து ஏற்படுத்த நாடகமாடியுள்ளார்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிக்க; ”இது எனக்கு பெரிய அவமானம்..” - IIFA விருது விழாவில் நடந்த மோசமான அனுபவம்.. கன்னட இயக்குநர் காட்டம்!

மேலும் அவர்கள், ”போகனஹள்ளி என்ற இடத்தில் வணிகவளாகம் அருகே சுருதியும் வம்சியும் சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று, அவர்கள் பைக் மீது மோதியதாகவும், உடனடியாக, காரில் இருந்து இறங்கிய 2 பேர் சுருதியின் காதலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் வைத்திருந்த போன்களை வாங்கிக்கொண்டு தப்பியோடியதாகவும் காதலர் வம்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு அந்தப் பகுதியில் அப்படி ஒரு விபத்து நடக்கவேயில்லை என தெரியவந்தது.

இதன்பின்னர், விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் மனோஜ் என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார். மொபைல் போன்களைப் பறித்துச் செல்வதற்காகத்தான் சுருதி, தம்மிடம் ரூ.1.1 லட்சம் கொடுத்தார் எனவும், அவரே இதற்கான சதித்திட்டம் தீட்டினார் எனவும் தெரிவித்துள்ளார். பின்னர், சுருதி மனோஜிடம் அன்றிரவே அந்த போன்களை வாங்கியுள்ளார். ஆனால் பாஸ்வேர்டு இருந்த மொபைல் போனை சுருதியால் திறக்க முடியாததால், அதை ஏரியில் தூக்கி எறிந்துள்ளார்” எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

model image

இந்த சம்பவத்தில், மனோஜ் குமார், சுரேஷ் குமார், ஹொன்னப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், காதலருடனான ஆபாச புகைப்படங்களை அழிப்பதற்காக போலியான விபத்து ஒன்றை ஏற்படுத்திய சுருதியையும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிக்க; முக்கிய செய்தி|அக். மாதத்தில் 15நாட்கள் வங்கிகள் விடுமுறை; எந்த மாநிலம்,எந்தெந்த தேதிகள்? முழுவிபரம்