இந்தியா

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் : நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை!

JustinDurai

போதைப்பொருட்கள் விற்பனை விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

பெங்களூருவில் சமீபத்தில் போதைப் பொருட்கள் கடத்திய புகாரில் அனிகா என்ற சீரியல் நடிகையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரையுலகில் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலருக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கூறியிருந்தார்.

இதற்கிடையில்  பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரில் 15 முன்னணி நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் கன்னட திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இப்புகார் தொடர்பாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த வாரம் பெங்களூரு எலகங்காவில் உள்ள நடிகை ராகிணி திவேதி வீட்டுக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்று அவரை கைது செய்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். 

ராகிணியின் கைது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதே புகாரில் மற்றொரு நடிகையான சஞ்சனா கல்ராணியின் நண்பரான ராகுலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொடுத்துள்ள தகவல் அடிப்படையில் சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சஞ்சனா கல்ராணியையும் போலீசார் கைது செய்யும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. சஞ்சனா கல்ராணி, நடிகை நிகில் கல்ராணியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.