நாய் கடித்து இறந்த இளைஞர் PT
இந்தியா

“உன்கூட வாழ அதிர்ஷ்டம் இல்லை; உன் அப்பா சொல்லும் பையனையே..”- காதலியை இறுதிசடங்குக்கு அழைத்த காதலர்!

Rishan Vengai

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள நெலமங்களா டபஸ்பெட் பகுதியை சேர்ந்தவர் கிரண். கடந்த சில நாட்களுக்கு முன் வெறிநாய் கடித்ததால் காயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமான நிலையில், தான் உயிர்வாழ மாட்டேன் என்பதை உணர்ந்த அவர் தன்னுடைய காதலிக்கு வீடியோ அழைப்பு செய்துள்ளார்.

வெறிநாய் கடித்து இளைஞர் பலி

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் இச்சம்பவத்தில், கிரணை அவருடைய காதலியின் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவர் காதலிக்கு பரிசளித்த கொலுசு மற்றும் மோதிரங்களை பார்த்து சண்டைப்பிடித்துள்ளார் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், வெறிநாய் கடித்து ராபிஸ் தொற்று அதிகமான நிலையில், தன் காதலியை அப்பா கூறும் பையனையே திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியிருக்கும் கிரண், காதலிக்கு வீடியோ பேசியபோதே உயிரைவிட்டுள்ளார்.

”என் இறுதிச்சடங்குக்கு வா.. உன் அப்பா கூறும் பையனையே திருமணம் செய்துகொள்..”

உயிரிழப்பதற்கு முன்னதாக காதலிக்கு உருக்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், “நான் நீண்ட காலம் வாழ மாட்டேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரைக்கும் கூட இருக்கற அதிர்ஷ்டம் எனக்கு இல்ல. உன் அப்பா சொல்வதைக் கேட்டு நடந்துக்கோ.

பெற்றோர்கள் பார்த்து வைக்கும் பையனை திருமணம் செய்து நன்றாக இரு. ஒரேயொரு வேண்டுகோள் மட்டும், உனக்கு குழந்தை பிறந்தால் அதற்கு என் பெயர் வைப்பியா?” என்று கூறிய கிரண் எனது இறுதிச் சடங்கிற்கு நீ வர வேண்டும் என்ற கடைசி ஆசையை கூறிவிட்டு இறந்ததாக கூறப்படுகிறது.