இந்தியா

‘சமாஜ்வாதி ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ - வலுக்கும் எதிர்ப்பு

webteam

சமாஜ்வாதி உறுப்பினர் ஆசம் கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தின் போது பாரதிய ஜனதா உறுப்பினர் ரமா தேவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ரமாதேவி குறித்து ஆசம் கான் ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளை கூறினார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். 

இதனைத் தொடர்ந்து ஆசம் கான் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஆசம் கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவையில் ஆசம் கான் செய்த தவறை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் கடும் தண்டனை வழங்க சபாநாயகர் உத்தரவிட தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் பாரதிய ஜனதா பெண் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்‌‌. 

இது தொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நேற்று நடைபெற்றது மிகவும் வருத்தப்படவேண்டிய சம்பவம் நடைபெற்றது. இதற்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் வலியுறுத்தினார். அதேபோல மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. ரமா தேவி இந்தச் சம்பவத்தை சிறப்பாக கையாண்டார். ஆசம் கான் இந்தக் கருத்திற்கு ஒன்று மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது அவரை அவையிலிருந்து நீக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.