ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீடு திட்டம் முகநூல்
இந்தியா

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீடு திட்டம்’!

PT WEB

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,

”70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பிரதமரின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தை வருமான நிபந்தனையின்றி விரிவாக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் வரையில் இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழிவகுக்கும் இத்திட்டம் மூலம் நான்கரை கோடி குடும்பங்களை சேர்ந்த 6 கோடி முதியவர்கள் பலன் பெறுவார்கள்.

மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 10,900 கோடி ரூபாய் மதிப்பில் பிஎம் இ டிரைவ் திட்டத்தை செயல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கான இத்திட்டம் மூலம் மின் வாகனங்கள் வாங்க மானிய சலுகைகள், மின்சார சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், சாலை வசதி இல்லாத 25 ஆயிரம் கிராமங்களுக்கு 62,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர 31,350 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் நிலையங்கள் மேம்பாட்டுக்கு 12,461 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.