ஷிலாத்யா சேத்யா twitter
இந்தியா

அசாம்: மனைவி இறந்த துக்கம் தாளாமல் உள்துறை செயலாளர் எடுத்த விபரீத முடிவு!

Jayashree A

அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் உள்துறை மற்றும் அரசியல் செயலராக ஷிலாத்யா சேத்யா ஐபிஎஸ் பதவி வகித்து வந்தார். இவருக்கு வயது 44. இவரது மனைவி போர்பருவா, கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மனைவியை சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக கூட்டிச்சென்றுள்ளார். ஆனாலும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

தொடர்ந்து போர்பருவாவின் உடல்நிலை மோசமாகவே, கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக icu-வில் சமீபத்தில் அனுமதித்துள்ளார் ஷிலாத்யா சேத்யா. இருப்பினும் கடந்த சில நாட்களாக போர்பருவாவின் உடல் மிகவும் மோசமடைந்து வந்துள்ளது. மருத்துவரும் போர்பருவா நிலைகுறித்து ஷிலாத்யா சேத்யாவிடம் கூறி இருக்கிறார். இந்நிலையில், நேற்று மாலை 4.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி போர்பருவா இறந்திருக்கிறார்.

மனைவி இறந்த செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு வந்த ஷிலாத்யா சேத்யா, “எனது மனைவிக்கு அஞ்சலி செலுத்தவேண்டும். ஆகையால் எனக்கு தனிமை வேண்டும்” என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அவர்களும், ICU-வில் இருந்த ஊழியர்கள் வெளியேறி சென்றுள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில் உள்ளிருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவும், ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு ஷிலாத்யா சேத்யா தனது கைத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷிலாத்யா சேத்யா வாழ்க்கை

ஷிலாத்யா சேத்யாவுக்கு, போர்பருவாருடன் கடந்த 2013ல் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. சமீபத்தில் இவர் தாயாரும், இவரது மாமியாரும் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றனர். வேலை பளு, குழந்தையின்மை, மனைவியின் உடல்நிலை, அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதங்கள் இவை அனைத்துமே இவரது தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

துப்பாக்கி

ஷிலாத்யா சேத்யா கிரிமினல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதற்காக 2015ல் குடியரசுத்தலைவரின் கையால் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர். ஐபிஎஸ் அதிகாரியான இவர் குடியரசுத்தலைவரின் வீரப்பதக்கம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பித்தக்கது. கடந்த 4 மாதங்களாக மனைவிக்காக அவர் விடுப்பிலேயே இருந்திருக்கிறார் என தெரிகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.