இந்தியா

சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

webteam

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாமியார் ஆசாராம் பாபு மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் ராஜஸ்தான், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சிறுமியை ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார். இதன் காரணமாக சிறை மற்றும் சுற்று வட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜோத்பூரில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். உ.பி. மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் அதிகமுள்ள ராஜஸ்தான், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாமியார் ஆசாராம் பாபு குஜராத், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர்.