அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர்
இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

Prakash J

அரவிந்த் கெஜ்ரிவால் ஐபோன் பாஸ்வேர்டு: ஆப்பிள் நிறுவனத்திடம் உதவி

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று (ஏப்ரல் 2) உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வருக்கு சிறப்பு உணவு, மருத்துவ உபகரணங்கள், குறிப்பிட்ட சில புத்தகங்கள் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை, ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில், "மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஹவாலா பணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கிடைக்கப் பெற்று அதை அவர்கள் கோவா சட்டமன்ற தேர்தல் பணிக்காக பயன்படுத்தினார்கள். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்டுகளை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும்” எனச் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், அவருடைய கைப்பேசியை ஹாக்கிங் தெரிந்த சாஃப்ட்வேர் நிபுணர்கள் மூலம் அமலாக்கத் துறை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை அணுகி திறக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பரிசோதனைக்குச் சென்ற 4 மாத கர்ப்பிணி.. மொழி புரியாமல் கருக்கலைப்பு செய்த மருத்துவமனை!

ஆப்பிள் நிறுவனம் மறுப்பது இது முதல்முறையல்ல!

இதற்காக அமலாக்கத் துறை ஆப்பிள் ஐபோனை நிறுவனத்தின் உதவியை நாடிய நிலையில், ’உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும். தங்களால் திறக்க முடியாது’ என அந்நிறுவனத்தில் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அடுத்தகட்ட ஆலோசனையில் அமலாக்கத் துறை களம் இறங்கியுள்ளது.

அதேநேரத்தில், ஓர் உரிமையாளரின் பாஸ்வேர்டை ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திடம் விசாரணை அமைப்புகள் கேட்பது, இது முதல்முறையல்ல. கடந்த 2020ஆம் ஆண்டு, பென்சகோலா கடற்படை விமான நிலையத்தில் மூன்று அமெரிக்கர்கள் இறந்துபோயினர். அப்போது இவ்வழக்கு தொடர்பாக சவூதி விமானப் படையின் இரண்டாவது லெப்டினென்ட் முகமது சயீத் அல்ஷாம்ராணியின் ஐபோனைத் திறக்க ஆப்பிள் நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. எனினும், அல்ஷாம்ராணியுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்களை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கியது.

அதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சான் பெர்னார்டினோ தாக்குதலில், சையத் ரிஸ்வான் ஃபாரூக் மற்றும் தஷ்ஃபீன் மாலிக் ஆகிய இரு சந்தேக நபர்களின் ஐபோன்களை திறக்க FBI க்கு உதவுமாறு ஃபெடரல் நீதிபதி ஆப்பிள் நிறுவனத்திடம் கேட்டார். ஆனால், அப்போதும் ஆப்பிள் நிறுவனம் FBIக்கு உதவ மறுத்துவிட்டது.

இதையும் படிக்க: ’என் புருஷனை கொன்றால் ஸ்பாட்டிலேயே ரூ.50 ஆயிரம்’ - ஸ்டேட்டஸ் வைத்த மனைவி.. பதறியோடிய கணவர்!