ராம்தேவ், உச்சநீதிமன்றம் ட்விட்டர்
இந்தியா

மன்னிப்பு விளம்பரம்: மீண்டும் மீண்டும் ’குட்டு’ வாங்கும் பதஞ்சலி.. கண்டித்த உச்ச நீதிமன்றம்!

Prakash J

யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். ஆயுர்வேத துறையில் பிரபலமான நிறுவனமாக விளங்கும் ’பதஞ்சலி’ தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாபா ராம்தேவ், பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். அப்போது, பிரமாணப் பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள், “மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம்” என நினைக்காதீர்கள்” என பாபா ராம்தேவ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததுடன், புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: புதிய மதுபான முறைகேடு| கெஜ்ரிவால், கவிதாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அதற்குப் பிறகு நடைபெற்ற விசாரணையின்போது, (ஏப்ரல் 16) ”மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி (இன்று) தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் பொது மன்னிப்புக்கோரினார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அதனை பார்த்த நீதிபதிகள், ”மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் அளவுக்குச் சிறிதாக உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இதுபோன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா” என்று கேள்வி எழுப்பிய அவர்கள், ”பொருளை விளம்பரப்படுத்துவதுபோல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: ஆந்திரா| மகளைக் கடத்த மணமகன் வீட்டார் மீது மிளகாய்ப் பொடி வீச்சு.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. #Video