இந்தியா

நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா

webteam

நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசாக வழங்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இதமட்டுமல்லாமல் பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஷர்துல் தாக்கூர்.

அதேபோல் தமிழக வீரர் நடராஜன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அசத்தினார். தந்தை இறப்புக்குக் கூட போகாமல் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் சிராஜ், இப்படியாக இந்தியாவின் இளம் படையான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆனந்த் மஹிந்திரா கார் பரிசை அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹிந்திரா தார் காரை பரிசளிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.