amitshah kejriwal pt web
இந்தியா

“முதல்வர் இல்லம் கட்டியதில் பல கோடிகள் முறைக்கேடு” - டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவில் அமித்ஷா வாதம்

PT WEB

இன்று மக்களவையில் மசோதா மீதான விவாதத்தில் எதிர்கட்சிகள் பங்கேற்றனர். சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையில் மீண்டும் மீண்டும் அமளி ஏற்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கைகளை முற்றுகையிட்டு மீண்டும் மீண்டும் தொடர் முழக்கங்களை எழுப்புகிறார்கள். எனவே சகஜ நிலை திரும்பும் வரை நான் அவைக்கு வர மாட்டேன் என தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். இன்று காலையிலும் அவர் அவைக்கு வரவில்லை.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு அவையில் விவாதங்களை நடத்தலாம் நீங்கள் அவைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து மிகவும் சர்ச்சைக்குறியதாக கருதப்படும் டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவைக்கு வந்த சபாநாயகர் ஓம்பிர்லா விவாதம் நடப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய அமித்ஷா, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசுக்கு இதற்கான சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். டெல்லி அரசு அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்திற்கு வரும்வரை டெல்லி மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே சுமூகமான உறவு இருந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பதவியேற்ற பின் மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு சச்சரவுகளில் ஈடுபடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது என தெரிவித்தார். அதிகாரிகளின் நியமனத்தை கையில் எடுத்து ஊழலை மறைக்க முயற்சி செய்வதாகவும் முதல்வர் இல்லம் பல கோடி ரூபாய் செலவில் முறைக்கேடாக கட்டப்பட்டதை விசாரிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததால் தான் இந்த சட்டத்தை அவசரமாக கொண்டு வருவதற்கான தேவை ஏற்பட்டது என்றார். இதனை அடுத்து எதிர்க்கட்சியினர் மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.