இந்தியா

ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு

rajakannan

ஹரியானா மாநிலத்தில் வெற்றிபெற்ற அனைத்து சுயேச்சை எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானா சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தொடக்கம் முதலே பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் இடங்களை பிடித்தது. இதனால், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதில் இழுபறி நீடித்தது. 90 சட்டப்பேரவை இடங்களை கொண்ட ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஹரியானா தேர்தல் முடிவுகள்:

பாஜக - 40
காங்கிரஸ் - 31
ஜேஜேபி - 10
இந்திய தேசிய லோக் தள் - 1
சுயேச்சைகள் - 8

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. 40 இடங்களில் வென்ற பாஜகவுக்கு 6 இடங்கள் மட்டுமே ஆட்சி அமைக்க தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் கூடுதலாக தேவை. 10 இடங்களை பிடித்த ஜனநாயக ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சி முதல்வர் பதவியே கேட்டுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டியுள்ளது. சுயேச்சைகள் 8 பேரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக தெரிகிறது.