இந்தியா

கோலாகலமாக நடந்து வரும் அம்பானி வீட்டு திருமணம்

கோலாகலமாக நடந்து வரும் அம்பானி வீட்டு திருமணம்

webteam

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பையில் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்து வருகிறது.

முகேஷ் அம்பானி மூத்த மகனான ஆகாஷ் அம்பானி. ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லேக்கா. இவர்களது திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டர் அரங்கில் திருவிழா போல் 3 நாள்கள் நடைபெற்று வருகிறது. பள்ளிப்பருவம் முதலே நண்பர்களாக இருந்த ஆகாஷ் அம்பானியும் , ஷ்லேக்காவும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல புரிதலில் இருந்து காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் இரண்டு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்ட இவர்களது திருமணம், உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களின் படைசூழ பல கோடி ரூபாய் செலவில் திருவிழா போல் நடைபெறுகிறது.

திருமணத்தில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைசார்ந்த பிரபலங்களும் உலகளவில் முன்னணி தொழிலதிபர்களும் மும்பையில் முகாமிட்டனர். மாளிகை போன்ற அரங்கில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் பல வண்ண ஆடைகளில் நட்சத்திரங்கள் போல ஜொலித்தனர்.

கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், மற்றும் நடிகர் ரஜினிகாந்த், விளையாட்டு வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மணவிழாவில் பங்கேற்றனர். ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன், இ‌ங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்க‌ளும் மும்பையில் சங்கமித்தனர்.

திருமண அழைப்பிதழுக்கு மட்டுமே லட்சக்கணக்கில் செலவிடப்பட்ட நிலையில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில், தடபுடலான விருந்து மற்றும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்ட ஏற்பாடுகளுடன் களைகட்டுகிறது 3 நாள் திருமண விழா.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கி நாளை வரை திருமண கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல பல்வேறு பிரபலங்கள் மும்பையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.