x page image x page
இந்தியா

தொடரும் சம்பவங்கள்| உணவில் பிளேடு.. உறுதிசெய்து இழப்பீடு வழங்கிய ஏர் இந்தியா.. நிராகரித்த பயணி!

Prakash J

சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன. அந்த வகையில், சமீபத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் 9ஆம் தேதி பெங்களூருவிலிருந்து AI 175 என்ற எண் கொண்ட விமானம் சான்பிரான்சிஸ்கோ சென்றது. இதில் பயணித்த மதுரஸ் பால் என்ற பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ந்துபோன அவர், அதுகுறித்த பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: மேற்கு வங்கம்: ரயில் விபத்து நடக்க இதுதான் முக்கியமான காரணம்! தற்போதைய நிலவரம் என்ன?

இதுகுறித்து அவர், ”ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு கிடந்தது. அதைக் கவனிக்காமல் வாயில் போட்டு இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகே, அது உணவில் இருப்பதை உணர்ந்தேன். துப்பியபோது அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்காக விமான பணிப்பெண் மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், கொண்டைக்கடலை வழங்கினார்” எனத் தெரிவித்த அவர், ”எந்தவொரு விமானத்தில் வழங்கப்படும் உணவிலும் பிளேடு இருந்தால் அது ஆபத்துதான். சாப்பிட்டால் நாக்கை வெட்டிவிடும். இத்தகைய உணவை ஒரு குழந்தை சாப்பிட்டால் என்ன ஆகும்” என அவர் மேலும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இவருடைய பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததை தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா உறுதி செய்தார்.

இதையும் படிக்க: இந்தியாவில் எகிறும் கச்சா எண்ணெய் இறக்குமதி.. இதுவரை இல்லாத அளவில் வரலாறு காணாத உச்சம்!

இதுகுறித்து அவர், “உணவில் கிடந்த பொருள், எங்கள் சமையல் பார்ட்னர், காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என்பது தெரியவந்துள்ளது. இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக கேட்டரிங் பார்ட்னருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு இயந்திரத்தை அடிக்கடி சோதனை செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா தனக்கு கடிதம் எழுதியதாகவும், இழப்பீடாக உலகில் இலவச வணிக வகுப்பு பயணத்தை வழங்கியதாகவும், ஆனால் அதை நிராகரித்ததாகவும் பத்திரிகையாளர் மதுரஸ் பால் தெரிவித்துள்ளார். ”அது, தனக்கு தரப்பட்ட லஞ்சம் என்பதாலேயே, அதை தாம் ஏற்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சந்திரபாபு நாயுடுவிற்கு பிரம்மாண்ட வெற்றியைத் தேடித் தந்த ராபின் ஷர்மா... யார் அவர்?