இந்தியா

ஆயுர்வேத மருத்துவமனையின் கழிவறைக்குள் புகுந்த சிறுத்தை..!

webteam

குஜராத் அருகே ஆயுர்வேத மருத்துவமனையின் கழிவறைக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறன.  மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். ஆனால் வனவிலங்குகள் இது தான் சமயம் என்று நினைத்து, தெருக்களில் ஜாலியாக நடமாட துவங்கியுள்ளது.

அந்த வகையில் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ள விலங்கான புனுகு பூனை ஒன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சாலையில் சுதந்திரமாக வலம்வந்தது. சுமார் 250 புனுகு பூனைகள் மட்டுமே உயிரோடு இருப்பதாக கூறப்படும் நிலையில், 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதை பார்த்துள்ளதாக வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அவரது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதேபோல உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில், சில மான்கள் சாலைகளில் உற்சாகமாக உலா வந்தன. இதேபோல சண்டீகரில் மான் ஒன்று சர்வசாதரணமாக சாலையை கடந்து சென்றிருக்கிறது.

அந்த வரிசையில், குஜராத் மாநிலம் காந்திநகர் கோலவாடாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையின் கழிவறைக்குள் சிறுத்தை ஒன்று நேற்று இரவு நுழைந்தது. இதையறிந்த மருத்துவமனை நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தது. தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் வனத்துறையின் உதவியுடன் அந்த சிறுத்தை மீட்கப்பட்டது.