இந்தியா

படிக்க முடியாமல் போய்விடுமோ?: ஸ்மார்ட்போனை பறித்துச் சென்றவர்களை விரட்டி பிடித்த சிறுமி

EllusamyKarthik

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி குசும் குமாரி. 

கடந்த ஞாயிறு அன்று மதியம் டியூஷனை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த குமாரியின் கையிலிருந்த ஸ்மார்ட்போனை பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர். உடனடியாக உஷாரான குமாரி அவர்களை விரட்டிப் பிடித்து அவரது போனை மீட்டுள்ளார்.

‘கொரோனா ஊரடங்கினால் எங்களது குடும்பம் நிதி சிக்கலில் தள்ளப்பட்டுள்ளது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எனது அண்ணன் படிப்பை நிறுத்தி விட்டார். நான் மட்டுமாவது நன்றாக படிக்க வேண்டுமென கூலி வேலைக்கு செல்லும் என் அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஆன்லைன் கிளாஸிற்காக தவணை முறையில் எனக்கு அப்பா போன் ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாங்கிக் கொடுத்தார். அந்த போனை தான் அவர்கள் பறித்து சென்றார்கள். போன் போவதை விட படிக்க முடியாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்திலேயே கொள்ளையர்களை விரட்டி பிடித்தேன். 

மூன்று மாதங்களாக பயிற்சி செய்து வரும் தற்காப்பு கலையும் எனக்கு இதில் கை கொடுத்தது’ என  தெரிவித்துள்ளார் குசும் குமாரி.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயம்பட்ட சிறுமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது செயலை பாராட்டி வீர தீர செயலுக்கான விருதை அவருக்கு கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.