இந்தியா

ம.பி: போலி ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட 90% கொரோனா நோயாளிகள் குணமடைந்த சம்பவம்!

JustinDurai

மத்தியப் பிரதேசத்தில் போலியான ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட 90 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருத்துக்காக நோயாளிகளின் உறவினர்கள் தவமாய் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில், ரெம்டெசிவிர் தட்டுப்பாடை பயன்படுத்தி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு கும்பல், போலி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்துள்ளது. இது தெரியாமல் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இந்த போலி ரெம்டெசிவிர் செலுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு போலி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் 1,200 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது, காலி பாட்டில்களில் குளுக்கோஸ் உப்பு கலந்த நீர் நிரப்பப்பட்டு ரெம்டெசிவிர் என விற்பனை செய்யப்பட்டது அம்பலத்துக்கு வந்தது.

இந்தூரில் இந்த போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்ட 10 நோயாளிகள் உயிரிழந்தனர். ஆனால் 90 சதவீத நோயாளிகள் உயிர் தப்பி உள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது, உண்மையான ரெம்டெசிவிர் ஊசி போட்டு தப்பித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டபோது, போலி ரெம்டெசிவிர் போட்டு தப்பித்தவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்ற அதிசயத்தைக் கண்டு சுகாதாரத்துறையினர் திகைத்துப்போய் இருக்கிறார்கள். எனினும் போலி ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விநியோகித்த கும்பல் மீதான போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.