இந்தியா

இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய 800 மாணவர்கள்!

webteam

இமாச்சலப்பிரதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சலப்பிரதேசம், ஜம்மு, பஞ்சாப், அரியானா மாநிலங்க ளில் தொடர்ந்து 3-வது நாளாக  மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், சுற்றுலாத் தளங்களான குலு, மணாலி, ஆகியவை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காங்ரா, குலு, சம்பா, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. ராவி, பியாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 

இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குலு மாவட்டத்தின் டோபி என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 21 பேர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

குலு, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் சிறுமி உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர். இந்த மழை வெள்ளத்துக்கு மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இமாச்சலில் உள்ள சம்பா மாவட்டத்தில் விளையாட்டு போட்டியில் பங்கேற்கச் சென்ற சுமார் 800 மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட னர். மேலும் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர், புத்த துறவிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 300 பேரும் சிக்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் பிரிதி பால் சிங் தெரிவித்துள்ளார். நிலச் சரிவு காரணமாக சம்பா மாவட்டத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 150 சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர்.

மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை மாநில அரசு மேற்கொண்ட போதிலும் சேதங்கள் அதிக அளவில் உள்ளதால் மத்திய அரசு உதவ வேண் டும் என அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதனிடையே ஓசூரிலிருந்து சுற்றுலாச் சென்ற 21 பேரும், திருச்சியைச் சேர்ந்த 31 மாணவர்கள் உள்பட 41 பேரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருவது தெரியவந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.