இந்தியா

இடிபாடுகளை கிளறும்போது கிடைத்த தங்க புதையல்.. 8 தொழிலாளிகளும் என்ன செய்தார்கள் தெரியுமா?

JananiGovindhan

வீட்டை இடிக்கும் போது கிடைத்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழமை வாய்ந்த தங்க நாணயங்களை தங்களுக்குள்ளேயே தொழிலாளர்கள் பங்கிட்டுக் கொண்டது மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.

தொல்லியல் தன்மைபெற்ற அந்த 86 தங்க நாணயங்களை போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் பங்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர பதிடர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 19 மற்றும் 21ம் தேதி சுமார் 2600 சதுர அடி பரப்பளவு கொண்ட பழைய இடிந்த வீட்டின் இடிபாடுகளை அகற்றும் போதுதான் அந்த தங்க நாணயங்கள் அடங்கிய உலோக பாத்திரங்கள் கிடைத்திருக்கின்றன.

அந்த தொழிலாளிகளில் ஒருவர் பங்கிட்டுக் கொண்ட தங்க நாணயத்தை தன்னுடைய செல்ஃபோன் பில்லை சரிக்கட்டுவதற்காகவும், கைச்செலவுக்காகவும் வெறும் 56 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளூர் வாசியிடம் விற்றிருக்கிறாராம்.

இது தொடர்பாக பேசியுள்ள காவல்துறை அதிகாரி பதிடர், “8 பேர் கொண்ட தொழிலாளிகள் குழுதான் இந்த வேலையை பார்த்திருக்கிறார்கள். அவர்களை அனைவரையும் கண்டுபிடித்து கைது செய்ததோடு, தொல்லியல் பெருமை பெற்ற அந்த ஒரு கிலோ எடைகொண்ட தங்க நாணயங்களையும் கைப்பற்றி இருக்கிறோம். கைப்பற்றப்பட்ட அந்த தங்க நாணயத்தில் தற்போதைய விலை ஒரு கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.

மேலும், அந்த பழைய வீட்டின் உரிமையாளர் ஷிவ்நாராயண் ரத்தோட் பேசுகையில், “கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக அந்த பழைய வீட்டில் வசித்து வந்த போதும் தங்க புதையல் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.