Arrest Freepik
இந்தியா

பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதலுக்கான சதி? தீவிரவாதிகளா என்ற சந்தேகத்தில் 5 பேர் கைது!

Angeshwar G

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த விவகாரத்தில் 5 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என சந்தேகம் உள்ளது.

பெங்களூரு கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் நேற்று தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நேற்று நடந்தது. நேற்று கூட்டம் முடிந்த நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என சொல்லப்படுகிறது.

அங்கு தீவிரவாதிகளோடு இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இவர்கள் பெங்களூரு நகரில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு திட்டம் தீட்டியிருக்கலாமென கூறப்பட்டு, அதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினரின் விசாரணை நடந்து வருகிறது. 5 பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.