ராணுவ வீரர்கள் pt web
இந்தியா

ஜம்மு காஷ்மீர் | கத்துவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்... 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Angeshwar G

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா அருகே உள்ள பில்வாரில் ராணுவ வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், மேல்மும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல்களின்படி, கத்துவாவில் 150 கிமீ தொலைவில் மச்செடி - கிண்ட்லி - மல்ஹர் சாலையில் ராணுவ வாகனங்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஓர் மலை உச்சியில் இருந்து ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராணுவ வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பின்னர் ராணுவ வீரர்கள் தங்களது தாக்குதலைத் தொடங்கினர். ஆனாலும், பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து அருகில் உள்ள காட்டுக்குள் தப்பி ஓடி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவத்தினர் விரைந்து வந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த 48 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது.