இந்தியா

பேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு 

webteam

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரண பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தவித்து வருகின்றன. இதனையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்க மூன்று பேர் கொண்ட குழுவினருடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. 

இந்த ஹெலிகாப்டர் உத்தர்காஷி மாவட்டத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக மாநில பேரிடர் மீட்பு குழுவின் செய்தி தொடர்பாளர், “நிவாரண பொருட்கள் எடுத்து சென்ற ஹெலிகாப்டரில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற பகுதிக்கு மீட்பு குழுவை சேர்ந்த 10 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.