இந்தியா

புயலில் சுவர் இடிந்து 23 பேர் பலி

webteam

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பலத்த புயல் காற்றில் திருமண மண்டபம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.

திடீர் புயல் தாக்கியபோது அங்கிருந்த மக்கள் சுவற்றுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்த ஷெட்டில் தஞ்சமடைந்ததாகவும், சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறை ஐஜி அலோக் வஷிஷ்டா கூறினார்.

காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள், அருகில் இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். மிகவும் மோசமான நிலையிலிருந்த ஒருவர் மட்டும் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். உயிரிழந்தவர்கள் உடல் இன்று பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.