உத்தரப்பிரதேசம் முகநூல்
இந்தியா

கர்வா சௌத்: விரதம் முடிந்தபின் விபரீத முடிவெடுத்த இரு பெண்கள்; அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவனின் நீண்ட நாள் ஆயுளுக்காக விரதம் இருந்த மனைவியே, பிறகு தனது கணவரையே கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசத்தில் கணவனின் நீண்ட நாள் ஆயுளுக்காக விரதம் இருந்த மனைவியொருவர், விரதத்துக்குப்பின் தனது கணவரை தானே கொன்ற சம்பவம் நேற்று வெளிவந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதேபோல ஜெய்ப்பூரில், விரதத்தை முடித்தபின் பெண்ணொருவர் கணவர் மீதிருந்த ஆத்திரத்தில் தன் உயிரை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவை இரண்டு குறித்தும் இங்கே பார்க்கலாம்...

கர்வா சவுத் பண்டிகை என்பது என்ன?

டெல்லி, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் கர்வா சவுத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டி பெண்கள் கொண்டாடும் பண்டிகைதான் கர்வா சவுத். கணவரின் நீண்ட ஆயுளுக்காக அன்றைய தினம் ஒவ்வொரு திருமணாமான, இறை நம்பிக்கையுள்ள நோன்பு மேற்கொள்வார். பின் அந்த நாளின் இறுதியில் சல்லடை வழியாக நிலவு மற்றும் தங்கள் கணவரின் முகத்தை பார்த்த பிறகு, நோன்பை நிறைவு செய்வார்.

உத்தரப் பிரதேச சம்பவம்:

இந்த நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநில கௌசாம்பி மாவட்டத்தில் இஸ்மாயில்பூர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் சவிதா, தனது கணவர் ஷைலேஷ் குமாருக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கர்வா சவுத் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக காலையிலிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்த அவர், சிறப்பாக விரதத்தையும் செய்துள்ளார். மாலையில் விரதத்தை முடித்துக் கொண்ட சூழலில், அப்போது வந்த அவர் கணவர் ஷைலேஷுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார் சவிதா.

இதன்பிறகு இருவரும் சமாதானமான நிலையில், இருவரும் சேர்ந்து இரவு உணவு உண்டுள்ளனர். அப்போது ஷைலேஷிடம் அருகில் இருக்கும் அறையில் இருந்து எதையோ எடுத்து வருமாறு கூறிய சவிதா, உடனடியாக அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

சைலேஷ் மரணம்

இதன்பிறகு, சிறிது நேரத்திலேயே ஷைலேஷ் மயங்கி விழுந்துள்ளார். ஷைலேஷ் மயங்கி இருந்ததை கண்ட அருகிலிருந்தவர்கள், சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, சற்று நினைவுக்கு வந்த சைலேஷ், சவிதா தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஷைலேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ஷைலேஷின் குடும்பத்தின் சவிதாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 105, 123, ஆகியவற்றின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. சவிதா கைது செய்யப்பட்ட சூழலில், ஷைலேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி தீர்வதற்குள், கர்வா சௌத்தில் மற்றொரு கோரமான சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஹர்மாராவில் ஓடும் ரயிலின் முன் ஒரு திருமணமான பெண் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அப்பெண் மரணித்ததை நேரில் பார்த்த சிறிது நேரத்தில், அவரது கணவரும் அதே இரவில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கர்வா சௌத்தில் கலந்து கொள்ள கணவன் தாமதமாக வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் அப்பெண் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து அரங்கேறிய இச்சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.