இந்தியா

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாத சிறுவன் எரித்துக்கொலை ? - உ.பி.-ல் சம்பவம்

webteam

உத்தரப் பிரதேசத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறாத சிறுவன் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் முகமது காலித். இவரது வீடு லக்னோவில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சிறுவனை கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 பேர் காரில் கடத்திச் சென்றுள்ளனர். அத்துடன் அந்த சிறுவன் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்டார். சிறுவன் ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறவில்லை என அவர்கள் கொளுத்தியாக தெரிவித்துள்ளார். அவரது தந்தையும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இதில் 50 சதவிகிதம் காயமடைந்த சிறுவன் இன்று காலை வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன் மகனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார், சிறுவன் வாக்குமூலம் அளிக்கும்போது மூன்று விதமான காரணங்களை கூறியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.