Heart health Freepik
இந்தியா

16 வயது சிறுவன் பிறந்தநாளன்று மாரடைப்பால் மரணம்... உடல் அருகே கேக் வெட்டி உடைந்துபோன பெற்றோர்!

Justindurai S

நவீன மாற்றங்கள் காரணமாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே உடல்நலம் சார்ந்த பல்வேறு அச்சத்திலேயே அன்றாடம் பொழுதை கழித்துவருகின்றனர். நம்மை மேலும் கலங்கச் செய்யும் வகையிலேயே சில சம்பவங்களும் நடக்கின்றன. அப்படியொரு சம்பவம்தான், சமீபத்தில் தெலங்கானாவில் நடந்துள்ளது.

Heart

சம்பவத்தின்படி தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள பாபாபூர் கிராமத்தைச் சேர்ந்த சி.ஹெச். சச்சின் என்ற 16 வயது சிறுவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாள் வந்துள்ளது.

Teenager Sachin

சச்சினின் அந்த பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்ட அவரது குடும்பத்தினர் அதற்காக கேக் வாங்கி, வீட்டை அலங்காரம் செய்து பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர். வீடு முழுக்கவும், வீட்டுக்கு வெளியேவும் சச்சினின் புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க சச்சினின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரும் கூடியிருந்துள்ளனர்.

அப்போது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே சச்சின் திடீரென சுருண்டு கீழே விழுந்துள்ளார் என சொல்லப்படுகிறது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சச்சினை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் சச்சின் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதுவரை தங்களுடன் மகிழ்ச்சியாக இருந்த மகன், இறந்துவிட்டதாக கூறப்பட்டதை பெற்ற மனம் முதலில் ஏற்கவில்லை.

இறப்புக்கான காரணம் குறித்து அவர்கள் விசாரிக்கையில், மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 16 வயதேயான சிறுவன் சச்சின் தனது பிறந்த நாளில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி, அனைவரையும் பெரும் சோகத்துக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் சடலமாக வீட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்ட சச்சினுக்கு, பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்கை வெட்டி அருகில் வைத்து நினைவஞ்சலி செலுத்தி மரியாதை செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர். இச்சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.