ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை, மோகன்லால் pt web
இந்தியா

கேரளா | மோகன்லால் உட்பட 15 உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா - புயலைக் கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை!

PT WEB

செய்தியாளர் சுமிதா மனு

AMMA

கேரள மாநில திரைப்பட நடிகர்கள் சங்கம் AMMA. இந்த சங்கத்தின் புதிய நிர்வாகிகளை, அதன் 505 உறுப்பினர்கள் தேர்வு செய்து ஒன்றரை மாதம் ஆகிறது.

இந்த அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லாலை இந்த அமைப்பு உறுப்பினர்கள் தேர்வு செய்த நிலையில் பிரபல நடிகர் சித்திக் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேலும், பொருளாளர், துணைத்தலைவர், துணை செயலாளர் என 16 பேரை இந்த அமைப்பின் 505 உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர். அந்த கமிட்டி இந்த அமைப்பை வழி நடத்தி சென்றது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள திரைப்பட நடிகர்கள், நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது இது குறித்து விசாரிக்க கேரள அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை நியமனம் செய்தது. அந்த கமிட்டியிடம் கேரள திரைப்பட நடிகைகள் பலர் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை தெரிவித்தனர்.

ஹேமா கமிஷன் அறிக்கை

இந்த கமிட்டி மலையாள திரைப்படத்துறையில் பிரபல நடிகர்கள் உட்பட திரைப்பட துறையில் உள்ள பலர், பல நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக அறிக்கை தயார் செய்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசுக்கு சமர்பித்தது.

இந்த அறிக்கை வெளியே வராத நிலையில் சில மாதங்களாக இந்த அறிக்கையை வெளியே விடவேண்டும் என மலையாள திரைப்பட நடிகர்களில் ஒரு தரப்பினர் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து கேரள அரசு இந்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த அறிக்கை வெளிவந்த நிலையில், கேரள திரைப்பட நடிகர் சித்திக், திரைப்பட நடிகரும் கொல்லம் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் உட்பட பல பிரமுகர்கள் மீது பெண் நடிகைகள் கொடுத்த பாலியல் தொல்லை புகார்களை கேரள ஊடகங்கள் வழியாக வெளியிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் கேரள மற்றும் இந்திய முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோகன்லால் உட்பட 15 பேர் ராஜினாமா

இந்த நிலையில் கேரள திரைப்பட நடிகர்கள் சங்கம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என AMMA அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருக்கும் ஜெகதீஷ் மற்றும் பிருத்விராஜ் உட்பட பல நடிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இன்று இந்த அமைப்பின் தலைவரான மோகன்லால் உட்பட இந்த அமைப்பில் துணை தலைவர், துணை செயலாளர், எக்சிகியூட்டிவ் உறுப்பினர்கள் உட்பட 15 பேர் ராஜினாமா செய்துள்ளனர். நேற்று முன்தினம் பாலியல் புகாருக்கு உள்ளாகியிருந்த சித்திக் ராஜினாமா செய்திருந்த நிலையில் மொத்தம் 16 பேர் கொண்ட குழு ராஜினாமா செய்து இருக்கிறது.

இந்த நிலையில், கொச்சி பகுதியில் உள்ள AMMA அமைப்பின் தலைமை அலுவலகம் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்த நிலையில் இரண்டு மாதத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர் என்றும், இரண்டு மாதமும் இந்த அமைப்பு மாதம் தோறும் திரைத்துறையில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு வழங்கி வரும் நல திட்டங்கள் வழங்கும் எனவும் கூறியுள்ளது.