இந்தியா

ஓட்டுநரின் அலட்சியத்தால் நிகழ்ந்த கோர விபத்து - 13 பள்ளிச் சிறுவர்கள் பலி

ஓட்டுநரின் அலட்சியத்தால் நிகழ்ந்த கோர விபத்து - 13 பள்ளிச் சிறுவர்கள் பலி

rajakannan

உத்திரப் பிரதேசத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில், 13 பள்ளிச் சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

குஷிநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் இன்று காலை 7 மணியளவில் விபத்தில் சிக்கியது. வேகமாக சென்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அந்த வேன் மீது கோரக்பூரில் இருந்து சிவன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 8-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “விபத்துக்குள்ளான பள்ளி வேனின் ஓட்டுநர், வாகனத்தை ஓட்டும் போது காதில் இயர் போன் மாட்டி இருந்தார். இது முற்றிலும் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு இழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

உயிரிழந்த பள்ளி சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.