இந்தியா

12 ஆண்டுகள்; 50 குழந்தைகள்: உ.பி.யை அதிரவைத்த பாலியல் சீண்டல்.. வெளியான அதிர்ச்சி பின்னணி!

JustinDurai

கடந்த 12 ஆண்டுகளாக 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து விற்று வந்துள்ளார் அரசு பொறியாளர் ஒருவர்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் ராம்பவன் சிங். 40 வயதான இவர் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பண்டேல்கண்ட் நகரில் தனது மனைவி துர்காவதியுடன் வசித்து வந்தார்.

ராம் பவன் சிங் கடந்த 12 ஆண்டுகளாக சிறுவர், சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வீடியோ எடுத்து வந்துள்ளார். அவற்றை ஆபாச இணையதளங்களில் அவர் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து சில மாதங்களாக அவரை கண்காணித்து வந்த சிபிஐ, கடந்த நவம்பர் மாதம் ராம்பவன் சிங்கை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. ராம் பவன் சிங்கின் லேப்டாப் மற்றும் பென் டிரைவ்களில் சுமார் 50 சிறுவர்களின் 66 பாலியல் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புந்தேல்கண்ட் பகுதியின் சித்ரகுட், பாந்தா, ஹமீர்பூர் ஆகியமாவட்டங்களின் கிராமங்களை சேர்ந்த 5 முதல் 16 வயதுள்ள சிறுவர்களை வைத்து பாலியல் வீடியோக்கள் படமாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதில் 600 புகைப்படங்களும் கிடைத்துள்ளன. ராம்பவனிடம் இருந்து ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் 12 செல்போன்கள், 2 மடிக்கணினிகள், 6 ன் டிரைவ்கள், 6 மெமரி கார்டுகள், ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், ஒரு ஸ்பை கேம் மற்றும் வதை கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 12 ஆண்டுகளில் 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். அவற்றை டார்க்நெட் வழியாக உலகெங்கிலுமுள்ள பல்வேறு வலைதளங்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.  

ஏழை குடும்பத்து சிறுவர்களை ஏமாற்றி தன் வீட்டுக்கு அழைப்பதை ராம்பவன் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர்களை செல்போனில் வீடியோ விளையாட வைத்தும், பரிசுகள் கொடுத்தும் நட்பு பாராட்டியுள்ளார். பிறகு அவர்களுக்கு போதை மருந்தும் கொடுத்து தன்வசப்படுத்தி பாலியல் வீடியோக்களை படமாக்கி உள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இவருக்கு இமெயில் தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ராம்பவன் சிங்கின் பின்னணி பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ராம்பவனுக்கு குழந்தைகள் இல்லை.

அரசு வேலையில் சேர்வதற்கு முன்பு ராம்பவன் சிங் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்துள்ளார். அப்போது இருந்தே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பழக்கம் ராம்பவனுக்கு இருந்துள்ளது. 2008-ம் ஆண்டு தனது டியூசனில் பயின்றுவந்த ஒரு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தொடர்ந்து, அச்சிறுவன் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளான். இதுகுறித்து பெற்றோர் டியூசனுக்கு வந்து விசாரிக்கையில் ராம்பவன் சிங்கின் பெற்றோர் அவர்களை சமாதானம் செய்து இனி தவறு நடக்காது எனக்கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

2009-ம் ஆண்டில் ராம்பவனுக்கு திருமணமானது. அப்போதுதான் அவருக்கு நீர்ப்பாசனத் துறையில் வேலை கிடைத்தது. ராம்பவனின் மனைவி வீட்டிலேயே இருந்தார். தனது அலுவலகத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தார்.

2010-ம் ஆண்டு ராம் பவன் மீது இரண்டாவது ஒரு பாலியல் புகார் வந்தது. தனது மகனிடம் ராம் பவன் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்வதாக ராம் பவன் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளரிடம் ஒரு தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராம் பவனின் இதுபோன்ற நடவடிக்கையை தொடர்ந்து அவரது தந்தை, சகோதரர்கள் ராம் பவன் உடனான உறவை துண்டித்துக்கொண்டு வேறிடம் சென்றனர்.

2012-ஆம் ஆண்டு முதல் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அவற்றை டார்க்நெட் வழியாக ஆபாச வலைதளங்களுக்கு விற்று வந்துள்ளார்.

தற்போது கடந்த 12 ஆண்டுகளில் ராம்பவன் சிங்கால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் யார் யார் என்பது குறித்த பட்டியலை சிபிஐ அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.

இச்சம்பவங்களில் ராம்பவன் சிங்கின் மனைவி தனது கணவருக்கு உடந்தையாக இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.